என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புனித யூதா ததேயு திருத்தலத்தின் 48-வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது
    X

    புனித யூதா ததேயு திருத்தலத்தின் 48-வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

    • மாலை 6 மணிக்கு திருச்செபமாலை மற்றும் புனிதரின் நவநாள் செபமும் நடக்கிறது.
    • அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்றமும், இரவு 7 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நிகழ்வும் நடைபெற உள்ளது.

    சென்னை:

    சென்னை வாணுவம்பேட்டையில் உள்ள புனித யூதா ததேயு திருத்தலத்தின் 48-வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    புனித யூதா ததேயு

    இயேசுவின் 12 சீடர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறவர். இயேசுவின் உருவ ஒற்றுமை கொண்டவரான புனித யூதா ததேவிற்கு சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த வாணுவம்பேட்டையில் தனி திருத்தலம் அமைந்துள்ளது. அனைத்து வேண்டுதல்களும் இங்கே நிறைவேறுவதால், எல்லா மதத்தினரும் இந்தத் திருத்தலத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

    கொடியேற்றம்

    பிரசித்தி பெற்ற திருத்தூதர் யூதா ததேயு திருத்தலத்தின் 48-வது ஆண்டு விழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு திருச்செபமாலை மற்றும் புனிதரின் நவநாள் செபமும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்றமும், இரவு 7 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நிகழ்வும் நடைபெற உள்ளது.


    இரண்டாம் நாளான நாளை (வெள்ளிக் கிழமை) நற்கருணைப் பெருவிழாவானது, 'இறைவிருந்து துயருறும் மாந்தரின் அருமருந்து' என்ற மைய சிந்தனையில் நடைபெறுகிறது. அந்த வகையில் மாலை 6 மணிக்கு திருச்செபாமலை மற்றும் புனிதரின் சிறப்பு நவநாள் செபம் நடைபெறும்.

    திருத்தேர் பெருவிழா

    3-ம் நாளான 25-ந்தேதி (சனிக்கிழமை) திருத்தேர் பெருவிழா நடக்கிறது. 'புனிதரின் தேர் வலம் வரட்டும், இறை மக்களின் வாழ்வு வளம் பெறட்டும்' என்ற மைய சிந்தனையில் நடைபெறும் திருவிழாவில், மாலை 6 மணிக்கு திருச்செபமாலை மற்றும் புனிதரின் சிறப்பு நவநாள் செபம். மாலை 6.30 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி, திருத்தேர் மந்திரிப்பு , திருத்தேர் பவனி நடைபெற இருக்கிறது

    நன்றிப் பெருவிழா

    4-ம் நாளான 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பேரருட் தந்தை, பா. எஸ்தாக்கியூஸ் (செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயரின் பொது பதில் குரு) தலைமையில் திருவிழா ஆடம்பரத் திருப்பலி நடக்கிறது.


    மாலை 5 மணிக்கு ஆங்கில திருப்பலி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து நன்றிப் பெருவிழா மற்றும் திருக்கொடியிறக்கம் நிகழ்வு நடைபெற உள்ளது. அதன்படி, மாலை 6 மணிக்கு திருச்செபமாலை, புனிதரின் சிறப்பு நவநாள் செபமும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர நன்றித் திருப்பலி மற்றும் திருக்கொடியிறக்கம் நிகழ்வு நடைபெற உள்ளது.

    குரோம்பேட்டை புனித அமல அன்னை ஆலய பங்கு தந்தை ஞா. பாக்கிய ரெஜிஸ் (மறைமாவட்ட ஆயரின் மேனாள் பொது பதில் குரு) தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளது.

    விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருத்தலத்தின் அதிபர் - பங்குத்தந்தை இ.அந்தோணி ராஜ், உதவி அதிபர் தந்தை அலெக்ஸ் ஆனந்த ராஜ், மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் முன்னின்று நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×