என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி நெட்டவேலம்பட்டி அரசு பள்ளியில் பட்டியலின மாணவர்களுக்கு சாதி ரீதியிலான பாகுபாடுகள் நடப்பதாக குற்றசாட்டு
- பள்ளியின் தமிழாசிரியர் மோகன்தாஸ், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதும், அதனையடுத்து பள்ளியின் ஆங்கில ஆசிரியை லில்லி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பாலியல் புகார் கூறப்பட்ட பள்ளியில் ஜாதீய ரீதியிலான பிரச்சினைகள் இருப்பதாகவும் பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி :
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சபெருமாள்பட்டி ஊராட்சி நெட்டவேலம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தமிழாசிரியர் மோகன்தாஸ், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதும், அதனையடுத்து பள்ளியின் ஆங்கில ஆசிரியை லில்லி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் பள்ளியில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாரதி விவேகானந்தன் பள்ளியில் விசாரணை மேற்கொண்டார். அப்போது ஒருசில பட்டியலின மாணவிகள் மட்டும், வரவழைக்கப்பட்டு, விசாரணையின் பேரில் கூறியபடி அறிக்கை எழுதி வாங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதற்கிடையே பாலியல் புகார் கூறப்பட்ட பள்ளியில் ஜாதீய ரீதியிலான பிரச்சினைகள் இருப்பதாகவும் பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பள்ளிக்கு சீருடை அணிந்து வர அனுமதி மறுப்பதாகவும், மதிய உணவு வழங்குவதிலும் பாகுபாடு காட்டப்படுவதாகவும் அவர்கள் புகார் கூறினர். மேலும் இதுதொடர்பாக பட்டியலின மாணவர்கள் கலெக்டரிடமும் புகார் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளியின் நிர்வாகத்தின் சாதி ரீதியான நடவடிக்கைகளை கண்டிப்பதாகவும், நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் தலைமையாசிரியர், ஆய்வக உதவியாளருமே காரணம் என பெற்றோர்கள் கூறினர். மேலும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பள்ளியையும் முற்றுகையிட்டனர். தகவலின் பேரில் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் போலீசாருடன் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில், சமயோசிதமாக விடுமுறையில் சென்ற தலைமையாசிரியரும், முசிறி மாவட்ட கல்வி அலுவலரும் பள்ளிக்கு வரவேண்டும் என கண்டித்ததன் பேரில் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
சம்பவ இடத்திற்கு முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாரதி விவேகானந்தன் மட்டும் வந்ததன் பேரில் பெற்றோர்கள் கொத்தளித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதல் நாள் நடந்த பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்திற்கு, தலைவர் சுப்ரமணியன் மற்றும் இதர மாண,வ மாணவிகளின் பெற்றோர்கள் அழைக்கப்படாததையும், குறிப்பிட்ட மாணவிகளிடம் மட்டும் அறிக்கையை சொல்லிய வண்ணம் எழுதி வாங்கியதையும் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நிலைமையை சமாளிக்க போலீஸ் தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தியன் பேரில், சம்பந்தப்பட்ட தலைமையாசியர் ராஜசேகர், ஆய்வக உதவியாளர் சசிகலா இருவரையும் பணியிட மாற்றம் செய்ய பெற்றோர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அவ்விருவரும் பள்ளியிலிருந்து இடமாற்றம் செய்யும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளியின் ஆங்கில ஆசிரியை லில்லி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்த, லில்லியின் கணவர் குணசேகர் அளித்த புகாரை திசை திருப்பவே, பள்ளி நிர்வாகத்தினர் சாதி ரீதியான அணுகுமுறைகள், நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்






