என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் முகூர்த்த நாளில் போக்குவரத்து நெரிசல்- பொதுமக்கள் அவதி
- கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
- நடவடிக்கை எடுத்து பல்லடம் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் வந்து செல்கின்றது.
திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும். இந்த நிலையில் நேற்று சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன.போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகரமே திக்குமுக்காடிப் போனது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. நகரின் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிப்படுகிறோம். ஏற்கனவே திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது. அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து பல்லடம் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.