என் மலர்
உள்ளூர் செய்திகள்

100 நாள் பணியாளர்கள் தரையில் அமர்ந்துபோராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
சேத்துப்பட்டு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் திடீர் போராட்டம்
- வெளி ஆட்களை வைத்து திட்ட பணிகள் செய்வதாக குற்றச்சாட்டு
- வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பெரணாம்பாக்கம், கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் நடைபெறும் திட்டப் பணிகளை வெளி ஆட்களை வைத்து திட்ட பணிகள் செய்வதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வை ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் பெரணம்பாக்கம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் திட்டப் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் முருகனுக்கு தகவல் தெரிவிக்காமலும், மேலும் திட்ட பணிகளை 100 நாள் பணியாளர்களை வைத்து செய்யாமல் வெளி ஆட்களை வைத்து செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் முருகன், தலைமையில் 100 நாள் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் 100 நாள் பணியாளர்கள் கூறுகையில் எங்களுக்கு கூலி சரிவர வழங்குவது கிடையாது, நடைபெற்று வரும் திட்டப் பணிகளை வெளி ஆட்கள் வைத்து திட்டப்பணிகள் செய்து வருகின்றனர், என்று கூறினர். பின்னர் தகவல் அறிந்து சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மற்றும் 100 நாள் பணியாளர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் இதுகுறித்து பணி மேற்பார்வையாளர், மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையடுத்து அங்கிருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இதனால் சிறிது நேரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.