என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் 2 தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து கடும் பாதிப்பு
    X

    திருவள்ளூரில் 2 தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து கடும் பாதிப்பு

    • மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு உயர்ந்தது.
    • கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட போளிவாக்கத்தில் திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சித்தேரி நிரம்பியுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு மற்றும் அழிஞ்சிவாக்கம் ஓடைகளில் அதிகளவில் மழை பெய்யும்போது நீர் நிரம்பி அதன் உபரி நீர் திறக்கப்படுவதால் அந்த நீரின் மூலம் போளிவாக்கம் பெரிய ஏரியும் சித்தேரியும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    இந்நிலையில் மாண்டஸ் புயல் மழை காரணமாக நேற்று பெய்த கனமழையால் போளிவாக்கத்தில் உள்ள சித்தேரி நிரம்பி உபரி நீர் வெளியேறிய நிலையில் போளிவாக்கம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

    இதனால் திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் தொழிற்சாலை வாகனங்கள், தனியார், அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் போன்ற இதர வாகனங்களும் இரு புறமும் மெதுவாக இயக்கப்படுகின்றன.

    இதனால் போளிவாக்கம் தரைப்பாலத்தை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை நீடிக்கும்பட்சத்தில் தரைப்பாலத்தில் நீர் அதிகமாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

    இந்த சித்தேரியை ஆழப்படுத்தி மேலும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுபோன்ற நிலை நிலவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

    இதன் வழியாக மெய்யூர், கல்பட்டு, மாளந்தூர், ஏனம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் சென்று வர இந்தப் பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

    மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பைக் கருதி நேற்று புழல் ஏரியிலிருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்து விட்டனர்.

    இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

    இதனால் கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    மேலும், இப்பாலம் சேதமடைந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று அதிகாலை முதல் சித்தஞ்சேரி, மயிலாப்பூர் என மாற்றுப்பாதையில் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு திருவள்ளூர் சென்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 17 செ.மீட்டர் மழை பெய்தது. திருத்தணி 16.2 செ.மீ., கும்மிடிப்பூண்டி 13.4 செ.மீ., சோழவரம் 12.9 செ.மீ., பள்ளிப்பட்டு 12.7 செ.மீ., ஊத்துக்கோட்டை 12.4 செ.மீ., செங்குன்றம் 12.1 செ.மீ., பொன்னேரி 11.2 செ.மீ., ஜமீன் கொரட்டூர் 11.6 செ.மீ., திருவள்ளூர் 11.4 செ.மீ., பூந்தமல்லி 11 செ.மீ., பூண்டி 10.5 செ.மீ., தாமரைப்பாக்கம் 9.6 செ.மீ., திருவாலங்காடு 8.8 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    குறைந்தபட்சமாக ஆர்.கே.பேட்டையில் 6.6 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    Next Story
    ×