செல்போன் சிக்னல் கிடைக்காமல் தவிக்கும் தேவணம்பாளையம் கிராம மக்கள்

நியாய விலை கடை, தபால் நிலையம் போன்றவற்றில் இணையவழி சேவை கிடைக்காததால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.அவசர தேவைக்கு கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பொங்கலூர் அருகே உள்ளது தேவணம்பாளையம் கிராமம். இங்கு 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், தற்காலத்து இளைஞர்கள் நகர பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர். பொங்கலூரில் பி.எஸ்.என்.எல் உட்பட பல்வேறு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

பொங்கலூரில் இருந்து தேவணம்பாளையம் கிராமம் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் இந்த கிராமத்தில் எந்த செல்போன் சிக்னலும் கிடைப்பதில்லை. கடந்த 3 ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஜியோ உட்பட எந்த நெட்வொர்க் சிம் உபயோகபடுத்தினாலும் சரியாக டவர் கிடைப்பதில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இ-மெயில், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கூட பயன்படுத்த முடியவில்லை என தெரிவிக்கின்றனர். வீட்டிற்குள் இருக்கும் போது எந்த ஒரு அழைப்பும் வருவதில்லை எனவும், அதே போல் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் வேதனையை தெரிவிக்கின்றனர்.

தேவணம்பாளையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தள்ளி பொங்கலூர் வந்தால் மட்டுமே செல்போன் பயன்படுத்த முடியும். கிராமத்தில் இருக்கும் போது மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பல முறை அரசு அதிகாரிகள், தொலை தொடர்பு நிறுவனங்கள் ட்ராய் ஆகியவற்றிற்கு மனு அளித்தும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

நியாய விலை கடை, தபால் நிலையம் போன்றவற்றில் இணையவழி சேவை கிடைக்காததால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். 5ஜி தொழில் நுட்பம் அறிமுக படுத்திய பிறகும் கூட தங்கள் கிராம பகுதிக்கு 2ஜி சேவை கூட கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com