search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறையில் 49.4 மி.மீ. மழை- திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
    X

    குழித்துறையில் 49.4 மி.மீ. மழை- திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்தது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.88 அடியாக உள்ளது. அணைக்கு 193 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றாழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. குழித்துறை பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 49.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கன்னிமார், களியல், முள்ளங்கினாவிளை, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்த மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவியது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. ஐயப்ப பக்தர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 888 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.83 அடியாக இருந்தது. அணைக்கு 790 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 788 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.88 அடியாக உள்ளது. அணைக்கு 193 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 21 அடியை எட்டியது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 2.4, பெருஞ்சாணி 1, பூதப்பாண்டி 5.2, களியல் 18.6, கன்னிமார் 4.6, கொட்டாரம் 16.4, குழித்துறை 49.4, மயிலாடி 22.4, நாகர்கோவில் 1, சுருளோடு 2, பாலமோர் 5.4, திற்பரப்பு 31.4, ஆரல்வாய்மொழி 4.2, அடையாமடை 6.2, முள்ளங்கினாவிளை 6.8.

    Next Story
    ×