search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணம் செய்து 8 மாதங்களுக்கு பிறகு தவிக்கவிட்டு சென்ற கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா
    X

    திருமணம் செய்து 8 மாதங்களுக்கு பிறகு தவிக்கவிட்டு சென்ற கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா

    • ஒருபுறம் காதல் கணவன் கைவிட்டாலும், பிறந்த வீடு தன்னை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் வந்த வைதேகிக்கு என்ன ஏமாற்றமே மிஞ்சியது.
    • காதலித்து 8 மாத காலம் இளம்பெண்ணோடு வாழ்ந்துவிட்டு உதறித் தள்ளிய இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள மங்களநாடு பகுதியைச் சேர்ந்தவர் வைதேகி (வயது 22). இவர் தன்னை விட 2 வயது குறைந்தவரான தொண்டைமானேந்தல் பகுதியை சேர்ந்த வல்லரசு (20) என்பவரை தீவிரமாக காதலித்து வந்தார். அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மணமேல்குடி கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பின்னர் பெற்றோருக்கு பயந்து, மதுரையில் 4 மாதமும், கோத்தகிரியில் 3 மாதமும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர்.

    இந்நிலையில் கோத்தகிரியில் இருந்தபோது காதல் திருமணம் கசந்து இருவருக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வல்லரசு, வைதேகியை அங்கேயே விட்டுவிட்டு தனது பெற்றோருடன் வந்து சேர்ந்துள்ளார்.

    காதல் கணவர் கைவிட்ட நிலையில், கோத்தகிரியில் தனியாக தவித்த வைதேகி பாதுகாப்பு கருதி தனது சொந்த ஊருக்கு திரும்பி பெற்றோரிடம் தன்னை சேர்த்துக்கொள்ளுமாறு கெஞ்சினார். ஆனால் தங்களை மறந்து எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட மகளை அவர்கள் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

    ஒருபுறம் காதல் கணவன் கைவிட்டாலும், பிறந்த வீடு தன்னை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் வந்த வைதேகிக்கு என்ன ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் கணவர் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து அங்கு சென்றார். ஆனால் அங்கு மாமனார், மாமியார், கணவர் உள்ளிட்டோர் வைதேகியை தாக்கி அங்கிருந்து துரத்தியுள்ளனர்.

    இதனால் செய்வதறியாமல் திகைத்த வைதேகி, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்த வைதேகி இறந்து விடலாம் என கருதி விஷம் அருந்தினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    அங்கு 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு தனது கணவர் வல்லரசு வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே வல்லரசு மற்றும் மாமனார், மாமியார் உள்ளிட்டோர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவுடையார்கோவில் போலீசார் வைதேகியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி காப்பகம் ஒன்றில் அவரை அனுமதித்தனர்.

    மேலும் விசாரணையை தொடங்கிய போலீசார் தலைமறைவர்களை தேடி வருகின்றனர். காதலித்து 8 மாத காலம் இளம்பெண்ணோடு வாழ்ந்துவிட்டு உதறித் தள்ளிய இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×