என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான வடிவரசன்
காதலியின் திருமணத்தை நிறுத்த வாழ்த்து போஸ்டர் ஒட்டிய வாலிபர்- குடியாத்தம் அருகே பரபரப்பு
- இளம்பெண் காதலை கைவிட்டதால் வடிவரசன் ஆத்திரம் அடைந்தார்.
- இளம்பெண்ணுடன் ஜோடியாக இருப்பது போல் இணைக்கப்பட்ட படத்தை வடிவரசன் போஸ்டர் அடித்தார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மேல்மாயில் செம்மண் குட்டையை சேர்ந்தவர் வடிவரசன் (வயது 26).
இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இளம்பெண்ணுக்கு குடியாத்தத்தை சேர்ந்த ராணுவ வீரருடன் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இளம்பெண் காதலை கைவிட்டதால் வடிவரசன் ஆத்திரம் அடைந்தார். இளம்பெண்ணுடன் ஜோடியாக இருப்பது போல் இணைக்கப்பட்ட படத்தை வடிவரசன் போஸ்டர் அடித்தார்.
குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று போஸ்டரை ஒட்டினார்.
அந்த போஸ்டரில் வாழ்த்துக்கள் நண்பா என அவரது நண்பர்கள் திருமணம் வாழ்த்து தெரிவிப்பது போல் இடம்பெற்று இருந்தது.
இதைப் பார்த்த இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒட்டப்பட்டிருந்த வாழ்த்து போஸ்டர்களை கிழித்தனர்.
மேலும் நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ வீரருடன் தங்களது மகளுக்கு திருமணம் நடத்த பாதுகாப்பு வழங்க கோரி பரதராமி போலீசில் பெற்றோர் புகார் செய்தனர்.
இது குறித்து டி.எஸ்.பி. ராமமூர்த்தி உத்தரவின் பேரில் பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வடிவரசனை பிடித்து விசாரித்தனர்.
இதில் காதலியின் திருமணத்தை நிறுத்த போஸ்டர் ஒட்டியது தெரியவந்தது. இதனையடுத்து வடிவரசனை போலீசார் கைது செய்தனர்.
காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் வாலிபர் தனக்குத்தானே வாழ்த்து போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






