என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே வீட்டுமனை பட்டா வழங்குவதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்
- லட்சிவாக்கம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள்.
- ஊத்துக்கோட்டை தாசில்தார் அருண்குமார் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா கிடையாது.
வீட்டுமனை பட்டா கேட்டு இவர்கள் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 30 வருடங்களாக கோரிக்கை மனு அளித்தனர்.
ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் அவர்கள் கிராமத்தின் அருகே உள்ள செங்காளம்மன் கோவில் அருகே கடந்த மாதம் 26-ந்தேதி திறந்த வெளியில் சமைத்து உண்ணும் போராட்டம் நடத்தினர்.
ஊத்துக்கோட்டை தாசில்தார் அருண்குமார் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் திறந்த வெளியில் சமைத்து சாப்பிடும் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அடுத்துள்ள பெரம்பூர் கிராம எல்லையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் தோப்பு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அளவீடு பணிகளில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் முரளி தலைமையில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பள்ளி மற்றும் அரசு ஆஸ்பத்திரி அல்லது அரசு அலுவலகம் கட்ட அனுமதி அளிப்போம். ஆனால் வீட்டுமனை பட்டா வழங்கு வதை எதிர்ப்போம் என்று கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த தாசில்தார் அருண்குமார் விரைந்து சென்று சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். உங்களின் எதிர்ப்பு குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிப்பேன் என்று உறுதி அளித்ததின் பேரில் பெரம்பூர் கிராம பொது மக்கள் கலைந்து சென்றனர்.






