search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: தந்தை-மகன் பலி
    X

    திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: தந்தை-மகன் பலி

    • மணி மற்றும் அவரது மகன் விஷ்ணு தேவ் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவிற்கு உட்பட்ட கரட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 35). இவரது மனைவி சரண்யா (23). இந்த தம்பதியரின் மகன் விஷ்ணு தேவ் (2).

    இவர்கள், தங்களது உறவினர்களான எல்லம்மாள் (50), பவித்ரா (28) ஆகியோரை அழைத்துக் கொண்டு திருச்சியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். காரை மணி ஓட்டினார்.

    அந்த கார் புலிவலம் வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. அதே வேளையில் எதிர் திசையில் சேலம் மாவட்டத்தை சார்ந்த சந்தானம் (37) என்பவர் திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இந்த இரண்டு கார்களும் நேருக்கு நேர், பயங்கரமாக மோதிக் கொண்டன.

    இதில் மணி மற்றும் அவரது மகன் விஷ்ணு தேவ் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எல்லம்மாள், பவித்ரா, சரண்யா ஆகிய மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த புலிவலம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் இதேபோன்று காளிப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் அம்மணி (65). இவர் இன்று அதிகாலை ரோட்டோரம் குப்பையை கொட்டிவிட்டு, சாலையை கடக்க முயன்ற பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துறையூர் பகுதியில் இன்று அதிகாலை நடந்த இருவேறு விபத்துகளில் குழந்தை உட்பட மூன்று பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×