என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜபாளையத்தில் கிரைண்டரில் மின்சாரம் பாய்ந்து ஆசிரியர் மனைவி மரணம்
- வீட்டுக்கு வந்த மகன் தாய் கிரைண்டரில் கையை விட்டபடி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் ஐ.என்.டி.யூ.சி. நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர பாண்டியன் (வயது 52). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி (45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று பாஸ்கர பாண்டியன் பணிக்கு சென்று விடவே மகன், மகள் பள்ளிக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமி மாவு அரைப்பதற்காக கிரைண்டரை இயக்கினார். அப்போது கிரைண்டருக்குள் கையை விடும்போது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் அவரது கை கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகன் தாய் கிரைண்டரில் கையை விட்டபடி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மின்சாரத்தை நிறுத்தியபின் ராமலட்சுமியின் உடலை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திர மோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






