என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொன்ற மகன்
    X

    விவசாயியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொன்ற மகன்

    • தந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற மகன் குரு மூர்த்தியை கைது செய்தனர்.
    • பண விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி தந்தையை மகன் எரித்துக்கொன்ற சம்பவம் பந்தல்குடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அருகே உள்ள வதுவார்பட்டியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 63), விவசாயி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் பாக்கியராஜ் புதிதாக டிராக்டர் வாங்கி உள்ளார். அதனை வாழ்வாங்கி கிராமத்தில் வசித்து வரும் தனது மகன் குருமூர்த்தி (32) என்பவரிடம் கொடுத்துள்ளார். அவர் அதனை ஓட்டி வந்தார்.

    இதற்கிடையே பாக்கியராஜ், தனது மகனிடம் டிராக்டர் ஓட்டுவதற்கான கூலி தொகை ரூ.1000-ஐ எடுத்துக் கொண்டு மீதி தொகையை தன்னிடம் வழங்குமாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தந்தை-மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது பாக்கிய ராஜ் பணத்தை கொடுக்கா விட்டால் டிராக்டரை கொண்டு வந்து விட்டுவிடு என்று கண்டிப்புடன் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று இரவு குருமூர்த்தி வதுவார்பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது அவரது தந்தை பாக்கியராஜ் தூங்கி கொண்டிருந்தார். ஆத்திரத்தில் இருந்த குருமூர்த்தி தந்தை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அறை கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதில் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய பாக்கியராஜ், நடந்த சம்பவம் குறித்து தனது மகளுக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த அவரது மகள், பாக்கியராஜை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுபற்றி பந்தல்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற மகன் குரு மூர்த்தியை கைது செய்தனர்.

    பண விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி தந்தையை மகன் எரித்துக்கொன்ற சம்பவம் பந்தல்குடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×