search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதையில் உளறியதால் அம்பலமான வாலிபர் கொலை- 3 பேர் கைது
    X

    குடிபோதையில் உளறியதால் அம்பலமான வாலிபர் கொலை- 3 பேர் கைது

    • மது போதையில் அவரது கூட்டாளிகள் உளறியதால் கொலை சம்பவம் அம்பலமாகி உள்ளது.
    • தமிழரசன் மாயமான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு நவீன், அழகேஷ், குணாளன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்

    மதுரை:

    மதுரை அண்ணாநகர் ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 27). கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ராஜாங்கம் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை. இதையடுத்து மாயம் தொடர்பாக அண்ணா நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் நண்பர்களுடன் மது அருந்தினார்.

    போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நவீன் சில மாதங்களுக்கு முன்பு ஒருவரை கொலை செய்து கிணற்றில் வீசியதாக உளறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் நவீனை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தமிழரசனை கொலை செய்தது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் தமிழரசன் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    ஒத்தக்கடை பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தமிழரசன் தனது நண்பர்களுடன் ஜாமீன் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

    அப்போது தமிழரசனுக்கும், பெரியசாமி மனைவி வள்ளிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பெரியசாமி, தனது மனைவியுடன் தமிழரசன் தகாத உறவு வைத்துள்ள விவகாரம் தெரியவந்தது.

    இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி, தமிழரசனை கொலை செய்ய நண்பர்களுடன் திட்டமிட்டார். அதன்படி, கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி தமிழரசனை மது குடிக்க வருமாறு அப்பன்திருப்பதி அருகே உள்ள குருத்தூர் கிராமத்துக்கு அழைத்துள்ளார்.

    அங்கு பெரியசாமி, அவரது நண்பர்கள் கொக்குளத்தை சேர்ந்த அக்கினி, பட்டணம் பகுதியைச் சேர்ந்த நவீன்(21), அழகேஷ்(18), குணாளன்(19), அழகர் ஆகியோருடன் தமிழரசன் மது குடித்தார்.

    அப்போது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெரியசாமி மற்றும் அவரது நண்பர்கள் தமிழரசனை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். பின்னர் அவர்கள் ஏற்கனவே திருடிக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிளில் தமிழரசனின் உடலை கயிற்றால் இறுக்கி கட்டி அதே பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் வீசியுள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் கொலை செய்த பெரியசாமியும், அக்கினியும் மற்றொரு திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றனர்.

    மது போதையில் அவரது கூட்டாளிகள் உளறியதால் கொலை சம்பவம் அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக நவீன் கொடுத்த தகவலின்பேரில் அண்ணாநகர் போலீசார் குருத்தூர் பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் மோட்டார் சைக்கிளுடன் எலும்புக்கூடாக கிடந்த தமிழரசன் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழரசன் மாயமான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு நவீன், அழகேஷ், குணாளன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அழகரை தேடி வருகின்றனர்.

    கொன்று வீசப்பட்ட வாலிபர் தமிழரசன் உடல் எலும்புக்கூடான நிலையில் 4 மாதத்திற்கு பின் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×