search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜாபர்கான்பேட்டையில் கோவில் திருவிழாவில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் 50 பேர் திரண்டு மோதல்: 18 பேர் கைது
    X

    ஜாபர்கான்பேட்டையில் கோவில் திருவிழாவில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் 50 பேர் திரண்டு மோதல்: 18 பேர் கைது

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்னை சத்யா நகர் 2-வது தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • பாலாஜி மற்றும் அவரது சகோதரர் பாரத் ஆகியோரின் வீட்டின் அருகில் ராஜா தரப்பினர் மேளம் அடித்தனர்.

    போரூர்:

    சென்னை ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். கம்யூனிஸ்டு கட்சியின் விருகம்பாக்கம் பகுதி துணை தலைவராக உள்ளார். இவரது மகன் பாலாஜி (வயது25).

    அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர்கள் இருவரும் நண்பர்கள். பாலாஜியும், ராஜாவும் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்தனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு பாலாஜி தனது நண்பர்கள் சிலருடன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார். அதேநேரத்தில் ராஜா அ.தி.மு.க.விலேயே இருக்கிறார்.

    பாலாஜி தி.மு.க.வுக்கு சென்ற பிறகு அவருக்கும், ராஜாவுக்கும் நட்பில் விரிசல் ஏற்பட்டது. அவர்கள் இரு தரப்பினர் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்னை சத்யா நகர் 2-வது தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது பாலாஜி மற்றும் அவரது சகோதரர் பாரத் ஆகியோரின் வீட்டின் அருகில் ராஜா தரப்பினர் மேளம் அடித்தனர்.

    அப்போது பாலாஜி மற்றும் ராஜா ஆகிய இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் தலையிட்டு அவர்களை சமரசம் செய்தனர். ஆனாலும் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 11 மணியளவில் மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. ராஜாவின் நண்பரான பிரகாஷ் என்பவர் பாலாஜியின் நண்பர் மனைவியிடம் தகராறு செய்து கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அப்போது அருகில் இருந்த பாலாஜியின் பெற்றோர் இதுகுறித்து தட்டிக் கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு முற்றி கைகலப்பு உருவானது.

    இதையடுத்து இரு தரப்பைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு மோதலில் ஈடுபட்டனர். கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

    இந்த மோதலின் போது பாலாஜி தரப்பினர் திடீரென்று எதிர் கோஷ்டியினர் மீது நாட்டு வெடி குண்டு வீசினர். அது வெடித்து சிதறியதால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    வெடிகுண்டு வீசப்பட்டதில் ராஜா தரப்பைச் சேர்ந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மோதல் குறித்து தகவல் அறிந்ததும் எம்.ஜி.ஆர். நகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மோதலில் ஈடுபட்ட என்ஜினீயர் பாலாஜி, கல்லூரி மாணவர் ஜானேஸ்வரன், எலக்ட்ரீசியன் கோபி உள்ளிட்ட 18 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததும் ராஜா தரப்பைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாக போலீசார், ராஜா உள்பட 20 பேரை தேடி வருகிறார்கள்.

    வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் ஜாபர்கான்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×