என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் டாஸ்மாக் பார் ஊழியர் குத்திக்கொலை
- கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக இளவரசனின் மனைவி பிரிந்து சென்று விட்டார்.
- இளவரசனுக்கும், மாரியப்பன் குடும்பத்திற்கும் இடத்தகராறு தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை அசோகர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் இளவரசன் (வயது 35). இவர் பேட்டை-கருங்காடு ரோட்டில் டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். கடந்த 12-ந்தேதி இரவு அசோகர் தெரு பெருமாள் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் கத்தியால் குத்தியதோடு, கம்பியால் சரமாரியாக தாக்கியது.
இதில் பலத்த காயம் அடைந்த இளவரசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்த புகாரின் பேரில் பேட்டை போலீசார் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்ற டப்பா மாரியப்பன், அவரது மகன்கள் மாதவன், சந்துரு உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
போலீசார் விசாரணையில் இளவரசனுக்கும், மாரியப்பன் குடும்பத்திற்கும் இடத்தகராறு தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக, எவ்வாறு புகார் தெரிவிக்கலாம் என கூறி தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியதுடன், கம்பியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து மாதவன் மற்றும் சந்துருவை கைது செய்தனர்.






