search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணி சேவூரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் மறியல்
    X

    ஆரணி சேவூரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் மறியல்

    • பள்ளிக்கல்வித்துறை 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலாண்டு தேர்வை புறக்கணித்துவிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மாணவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 765-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி தலைமையாசிரியராக மீனாட்சி உள்ளிட்ட 20 ஆசிரியர்கள் உள்ளனர்.

    இந்த பள்ளியில் படித்து வரும் 11ம் வகுப்பு மாணவனை 4ஆசிரியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவனின் பெற்றோர் மற்றும் கிராம பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் சேவூர் அரசு பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி தலைமையாசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து பள்ளி மாணவனை தாக்கியதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் ஆகியோர் சேவூர் அரசு பள்ளியில் நேரில் சென்றுவிசாரணை நடத்தினர்.

    இயற்பியல் ஆசிரியர் வெங்கட்ராமன், ஆங்கில ஆசிரியர் திலிப்குமார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் நித்தியானந்தம், பாண்டியன் பணியிட மாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அதிரடி உத்தரவிட்டார்.

    பள்ளிக்கல்வித்துறை 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலாண்டு தேர்வை புறக்கணித்துவிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

    மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் டி.எஸ்.பி ரவிசந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சஸ்பெண்டு மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 4 பேரையும் மீண்டும் இதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு சென்று விடுவோம் என மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×