search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு: ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
    X

    மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு: ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

    • தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். வகுப்புகள் இன்று தொடங்கியது.
    • முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் இன்று காலையிலேயே கல்லூரிக்கு வந்திருந்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது.

    இதில் இடஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதேபோல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்ற மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர்.

    நாடு முழுவதும் 2022-23ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகளை நவம்பர் 15-ந்தேதி தொடங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். வகுப்புகள் இன்று தொடங்கியது. இதையடுத்து முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் இன்று காலையிலேயே கல்லூரிக்கு வந்திருந்தனர். இதனால் கல்லூரி வளாகங்கள் களை கட்டின. பல கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளை வரவேற்றனர்.

    முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியதையடுத்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:-

    மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    மாணவர்களுக்கு மருத்துவர்களுக்கான உடை மற்றும் தேவையான பொருட்கள், உபகரணங்கள் வழங்கப்படும். மாணவ-மாணவிகள் ஜீன்ஸ்பேண்ட், டி-சர்ட், ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை அணியக் கூடாது. இதுபோன்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் ஆடைகட்டுப்பாடு விதிமுறைகளை மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டும்.

    கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    முதல் சுற்று கலந்தாய்வில் ஈரோடு அரசு மருத்துவ கல்லூரியில் எஸ்.டி. பிரிவினருக்கான 1 எம்.பி.பி.எஸ். இடம், 3 தனியார் பல் மருத்துவ கல்லூரியில் எம்.பி.சி. பிரிவில் 43 பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. இந்த 44 இடங்களும், முதல் சுற்றில் இடங்களை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேராததால் ஏற்படும் காலியிடங்களும் 2-வது சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும்.

    2-ம் சுற்று கலந்தாய்வு இந்த வார இறுதியில் ஆன்லைனில் தொடங்கப்பட உள்ளது. இந்திய பல் மருத்துவ கவுன்சில் அறிவித்த பிறகு அரசு மற்றும் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும்.

    Next Story
    ×