என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநில தொழிலாளர்கள் உயிருடன் தீ வைத்து எரிப்பு- 5 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
    X

    வடமாநில தொழிலாளர்கள் உயிருடன் தீ வைத்து எரிப்பு- 5 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

    • ஒருவருக்கு 80 சதவீதக்கு மேல் தீ காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையம் சரளைக்காடு பகுதியை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். என்ற முத்துசாமி. இவரது வெல்ல ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

    நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து வடமாநில தொழிலாளர்கள் கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் சிலர் சிமெண்டு அட்டையை உடைத்தனர்.

    பின்னர் அதன் வழியாக தாங்கள் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரோகி என்ற ராகேஷ் (வயது 19), சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சுகிராம் (20), யஸ்வந்த் (19) மற்றும் கோகுல் (24) ஆகிய 4 பேர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவருக்கு 80 சதவீதக்கு மேல் தீ காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்மநபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே நேற்று இரவு தமிழக கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜேடர்பாளையத்திற்கு வந்தார். அவர், வடமாநில தொழிலாளர்கள் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜேடர்பாளையம் பகுதியில் இனி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதியில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இருதரப்பு மக்களும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கூடுதல் டி.ஜி.பி. சங்கர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலைச்செல்வன் (நாமக்கல்), சக்திகணேசன் (ஈரோடு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்தநிலையில் தனிப்படையினர் சந்தேகத்தின்பேரில் 5-க்கும் மேற்பட்டோரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் கூறியுள்ளனர். இதை அடுத்து தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×