search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகாசியில்  2 பெண்கள் கொலை- வாரிசு வேலை பிரச்சினையில் உறவினர் வெறிச்செயல்
    X

    சிவகாசியில் 2 பெண்கள் கொலை- வாரிசு வேலை பிரச்சினையில் உறவினர் வெறிச்செயல்

    • இரட்டை கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமைறைவான காளிராஜனை தேடி வருகின்றனர்.
    • வாரிசு வேலைக்காக 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி முருகேஸ்வரி(வயது 50). இவர்களது மகன் ரவி. இவர் சிவகாசி மாநகராட்சியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரதிலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரவி திடீரென இறந்தார். அவரது வேலை கருணை அடிப்படையில் வாரிசுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரதிதேவி தனது கணவரின் வேலையை தனக்கு வழங்க வாரிசு சான்றிதழில் கையொப்பமிடுமாறு கேட்டுள்ளார். ஆனால் இதற்கு முருகேஸ்வரி மறுத்துவிட்டார்.தனது மகனின் வாரிசு வேலையை பேரனுக்கு வழங்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதனால் ரதிலட்சுமிக்கும், மாமியார் முருகேஸ்வரிக்கும் சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக நேற்று குடும்பத்தை சேர்ந்த பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதில் ரதிலட்சுமியின் சகோதரர் காளிராஜன் பங்கேற்று வாரிசு வேலை தொடர்பாக கடுமையாக பேசினாராம்.

    இன்று காலையும் சிவகாசி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள முனியப்பன் என்பவர் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த ரதிலட்சுமியின் சகோதரர் காளிராஜன் தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து முருகேஸ்வரியை சரமாரியாக குத்தினார். அப்போது அருகில் இருந்த முனியப்பனின் மனைவி தமயந்தி கருப்பாயி(60) தடுக்க முயன்றார். அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் 2 பேரும் ரத்த வௌ்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இரட்டை கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமைறைவான காளிராஜனை தேடி வருகின்றனர்.

    வாரிசு வேலைக்காக 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×