என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஞ்சாயத்து தலைவர் விஷம் குடித்து தற்கொலை- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
- சொந்த பணத்தில் பணிகள் செய்ததால் அவருக்கு பண கஷ்டம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட சங்குபட்டி பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தவர் ராதா (வயது 42).
பா.ஜனதா அறிவு சார் பிரிவு மாவட்ட துணைத் தலைவரான இவருக்கு ரம்யா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் நேற்று திடீரென விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.
அவரை குடும்பத்தினர் மீட்டு சங்கரன்கோவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, ராதா தற்கொலைக்கு குருவிகுளம் யூனியன் அதிகாரிகள் தான் காரணம் எனவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் அவரது உடலை பெற்று கொள்வோம் என கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ராதா தனது பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் தரைப்பாலம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்வதற்காக கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான பணம் ஒதுக்கீடு செய்ய காலதாமதம் ஏற்பட்டதால் அவரது சொந்த பணத்தில் இருந்து அடிப்படை வசதிகளை மேற்கொண்டுள்ளார்.
எனினும் குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அடிப்படை பணிகளுக்கான பணம் ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்க வில்லை. இதனால் அவர் மன விரக்தியில் இருந்து வந்தார். சொந்த பணத்தில் பணிகள் செய்ததால் அவருக்கு பண கஷ்டம் ஏற்பட்டது.
ரூ.30 லட்சம் வரை ஒப்பந்த பணிகள் செய்த வகையில் அதற்கான பில்லை அனுமதி வழங்காமல் வட்டார வளர்ச்சி அலுவலர் செயல்பட்டு உள்ளார்.
மேலும் பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக நிதி ஒதுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வந்ததால் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே அவரது தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






