

சென்னை:
வக்கீல் சோமசுந்தரம் என்பவர் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்தார். அல்ட்ரா டீலக்ஸ் வகையை சேர்ந்த பஸ்சில் சாதாரண பஸ்சை விட கூடுதல் கட்டணம் கொடுத்து பயணித்தார்.
பஸ்சில் இருக்கைகள் மிகவும் மோசமாக இருந்ததோடு நள்ளிரவில் மழைநீர் பஸ்சின் கூரையில் இருந்து ஒழுகியதாகவும் நுகர்வோர் குறைதீர்க்கும் கோர்ட்டில் புகார் அளித்தார். தனக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் கோரி இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் பயணி சோமசுந்தரத்துக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு நுகர்வோர் குறைதீர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மற்றொரு சம்பவத்திலும் பயணிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அப்துல் அஜிஸ் என்ற மூத்த குடிகன் சென்னை கோயம்பேட்டில் இருந்து வேதாரண்யம் செல்ல 9 டிக்கெட் முன்பதிவு செய்தார்.
அவருக்கு உரிய இருக்கைகள் வழங்கவில்லை. 40 இருக்கைகள் கொண்ட அந்த பஸ்சில் அப்துல் அஜிசும், குடும்ப உறுப்பினர்களும் நின்று கொண்டு பயணம் செய்தனர்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு கொண்ட அப்துல் அஜிஸ் நுகர்வோர் கோர்ட்டில் முறையிட்டார். முன்பதிவு செய்த பயணிக்கு அதற்கான இருக்கை வழங்காததால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பயணிக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.