search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • சந்தையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
    • சந்தையில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் எடைக்கேற்ப ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் நகராட்சி வார சந்தை மற்றும் கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த கால்நடை சந்தை தமிழகத்தின் 2-வது பெரிய சந்தையாக திகழ்ந்து வருகிறது. புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கும் இந்த சந்தைக்கு சத்தியமங்கலம், புளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விசாயிகள் ஆடுகள் அதிகளவு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    இங்கு கால்நடைகள் குறைந்த விலையில் கிடைப்பதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நாமக்கல், கரூர், திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடு, மாடு, கோழி, கன்று குட்டிகள் போன்ற கால்நடைகள் வாங்கி செல்கிறார்கள். மேலும் கர்நாடகா, கேரளா உள்பட வெளிமாநில வியாபாரிகளும் இந்த சந்தைக்கு வந்து கால்நடைகளை அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். இதனால் இந்த சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்நிலையில் நேற்று கால்நடை சந்தை வழக்கம் போல் கூடியது. நாளை (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் சந்தைக்கு விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    மேலும் தமிழகத்தின் 2-வது பெரிய கால்நடை சந்தை என்பதால் நேற்று வழக்கத்தை விட அதிகளவில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் சந்தையில் வழகத்தை விட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் கால்நடைகளை வாங்கி சென்றனர். ராம்ஜான் வருவதால் ஆடுகள் அதிகளவில் விற்பனையானது.

    இந்த சந்தையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் எடைக்கேற்ப ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. இதன் மூலம் நேற்று கூடிய சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×