என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்ணாரப்பேட்டையில் ரவுடி கும்பல் கத்தியுடன் மோதல்: 5 பேர் கைது
- மதன் தனது நண்பரான ஊத்துக்கோட்டையை சேர்ந்த ரவி என்பவருடன் வீட்டின் அருகே மது குடித்து கொண்டிருந்தனர்.
- ரவியின் தம்பி சுதாகருக்கும், மதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ராயபுரம்:
பழைய வண்ணாரப்பேட்டை, வீரா குட்டி தெருவை சேர்ந்தவர் மதன்.ரவுடியான இவர் மீது தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொலை, கொலைமுயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று வெளியே வந்தவர் ஆவார். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் மதன் தனது நண்பரான ஊத்துக்கோட்டையை சேர்ந்த ரவி என்பவருடன் வீட்டின் அருகே மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரவியின் தம்பி சுதாகருக்கும், மதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த ரவியின் மகன்கள் ரஞ்சித், ராகேஷ் மற்றும் அவரது நண்பர் சீனிவாசன் ஆகியோர் மதனை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தினர்.
இதில் பலத்த காயம் அடைந்த மதன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மதன் தரப்பினர் தாக்கியதில் ரவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரும் ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனந்தன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசில் இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ரவி மற்றும் அவரது மகன்கள் உள்பட 5பேரை போலீசார் கைது செய்தனர். சுதாகர், ரவி, ரஞ்சித், ராகேஷ், சீனிவாசன், ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.