search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் மீண்டும் கொட்டி தீர்த்த கனமழை- கடும் பனிமூட்டம், குளிரால் மக்கள் அவதி
    X

    நீலகிரியில் மீண்டும் கொட்டி தீர்த்த கனமழை- கடும் பனிமூட்டம், குளிரால் மக்கள் அவதி

    • ஊட்டி நகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கியது.
    • சாலைகளில் இருந்த குழிகளிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.

    குன்னூர்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கனமழை கொட்டி தீர்த்தது.

    இதை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக மழை குறைந்து வெயில் அடித்ததுடன், இதமான காலநிலையும் நிலவி வந்தது.

    இந்த கால நிலையை அனுபவிக்க சமவெளி பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். இதனால் அனைத்து சுற்றுலா தலங்களுமே களைகட்டி இருந்தது.

    இந்த நிலையில் தற்போது தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவையில் ஓரிரு நாட்கள் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இதன்படி நேற்று காலை நன்றாக வெயில் அடித்த நிலையில், மதியத்திற்கு பின்னர் ஊட்டி, அருவங்காடு, குன்னூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதனால் ஊட்டி நகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. சாலைகளில் இருந்த குழிகளிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.

    மழையுடன் கடும் பனிமூட்டமும் நிலவியது. பகல் வேளையே இரவு போல காட்சியளித்தது. எதிரே வரும் எந்த வாகனங்களும் தெரியவில்லை.

    இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். இதன்காரணமாக சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.

    கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அருவங்காடு, வண்டிச்சோலை, பர்லியார் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நீலகிரியில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்து இருப்பதால், கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×