search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளை சூழ்ந்த கழிவுநீரை அகற்றாததால் ஆத்திரம்- பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் அலுவலகம் முன்பு அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்
    X

    வீடுகளை சூழ்ந்த கழிவுநீரை அகற்றாததால் ஆத்திரம்- பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் அலுவலகம் முன்பு அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்

    • குடியிருப்புகளில் தெருக்கள் முன்பு குளம்போல் தேங்கி உள்ள கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
    • கழிவு நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சிக் குட்பட்ட 5-வது வார்டு பொன்னியம்மன் நகர், சி.ஆர்.எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரோடு கழிவுநீர் தேங்கி வீடுகளை சூழ்ந்து நிற்கிறது.

    இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். குடியிருப்புகளில் தெருக்கள் முன்பு குளம்போல் தேங்கி உள்ள கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கழிவு நீரை உடனடியாக அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கவுன்சிலர் வடிவேல் தலைமையில் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில ஈடுபட்டனர்.

    அவர்கள் நகராட்சி கமிஷனர் நாராயணனின் அலுவலக அறை முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்களிடம் கமிஷனர் நாராயணன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர் மீது பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டி முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களின் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் இல்லை என்றால் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி அவர்கள் தெரிவித்தனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் மழைநீர், கழிவு நீர் தேங்கி நிற்கும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மழை நீர் கால்வாய் அமைத்தும் இந்த பகுதியில் மழை நீர் செல்ல வில்லை என்று பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கழிவு நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×