search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் தொட்டி அமைக்க ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய தம்பதி- பொதுமக்கள் பாராட்டினர்
    X

    குடிநீர் தொட்டி அமைக்க ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய தம்பதி- பொதுமக்கள் பாராட்டினர்

    • முகாசிபிடாரியூர் பஞ்சாயத்து பகுதியில் டவுன் பஞ்சாயத்தினை விட அதிக மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • குடிநீர் விநியோகம் செய்ய மேல்நிலைத் தொட்டி இல்லாமல் இருந்தது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முகாசிப்பிடாரியூர் கிராம பஞ்சாயத்து, தமிழ்நாட்டில் மிகப்பெரிய கிராம பஞ்சாயத்துகளில் ஒன்றாக விளங்குகிறது.

    இந்த பகுதியில் 1010 வீடுகள் கொண்ட கைத்தறி நெசவாளர்கள் காலனி அமைந்துள்ளது. முகாசிபிடாரியூர் பஞ்சாயத்து பகுதியில் டவுன் பஞ்சாயத்தினை விட அதிக மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இங்கு சென்னிமலை டவுன் பகுதியினையொட்டி உள்ள குமராபுரி, அர்த்தனாரி பாளையம், பாப்பாங்காடு , பி.ஆர்.எஸ். ரோடு, களத்துகாடு பகுதியில் சுமார் 4,500-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய மேல்நிலைத் தொட்டி இல்லாமல் இருந்தது.

    மேலும் மேல்நிலைத் தொட்டி அமைக்க பஞ்சாயத்துக்கு சொந்தமான இடம் இல்லாததால் குடிநீர் தொட்டி அமைக்காமல் இருந்தது. இதனால் அப்பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் அப்பகுதியில் மேல்நிலைத் தொட்டி அமைப்பது சம்பந்தமாக பொது மக்கள் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு மேல்நிலைத் தொட்டி அமைக்க ஒரு இடத்தை பொதுமக்கள் சார்பாக சொந்தமாக விலைக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு இடத்தையும் தேர்வு செய்து வீட்டிற்கு ஒரு தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சென்னிமலை- பெருந்துறை ரோட்டில், முகாசிபிடாரியூர் அருகே குமராபுரி 3-வது வீதி பகுதியில் சேர்ந்தவர் முருகேஷ். இவரது மனைவி தமிழரசி. இவர்கள் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பிரதீப்கிருஷ்ணா என்ற ஒரு மகன் உள்ளார்.

    இவர்களுக்கு கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலைத் தொட்டி அமைக்க இடம் வாங்குவது குறித்து தகவல் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இந்த பகுதியில் உள்ள ஏழை மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் நீங்கள் இடம் வாங்க வேண்டாம். எங்களது சொந்தமான இடத்தை தானமாக தருகிறோம் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து முருகேஷ்- தமிழரசி தம்பதியினர் இரண்டே நாளில் அந்த பகுதியில் உள்ள அவர்களது இடத்தை கிராம பஞ்சாயத்துக்கு தானமாக எழுதி கொடுத்தனர்.

    இதை முகாசிப்பிடாரியூர் ஊராட்சி மன்றத் தலைவர் கேபிள் நாகராஜ், துணை தலைவர் சதீஷ் என்ற சுப்பிரமணியம், ஊராட்சி மன்ற 14-வது வார்டு கவுன்சிலர் செல்வி குழந்தைவேல் ஆகியோரிடம் தான பத்திரத்தை அவர்கள் வழங்கினர்.

    தானமாக தந்த அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் தந்த இடம் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல மேல்நிலை தொட்டி அமைக்க ஏதுவான மேடான பகுதியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் 4,500-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இது அமைந்ததுள்ளது. இதையடுத்து அவர்களை சுற்று வட்டார பொதுமக்கள் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×