search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி உசிலம்பட்டியில் மாடுகளுடன் உற்பத்தியாளர்கள் மறியல்
    X

    பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி உசிலம்பட்டியில் மாடுகளுடன் உற்பத்தியாளர்கள் மறியல்

    • மாட்டுத்தீவனங்கள் விலை அதிகரித்து விட்டது.
    • தற்போது ஒரு லிட்டர் பசும்பால் ரூ.32-க்கும், எருமைப்பால் ரூ.41-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தி சங்கத்தினர் நக்கலப்பட்டியில் மதுரை-தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல் மாதரை மற்றும் பெரிய செம்மெட்டுப்பட்டி ஆகிய இடங்களிலும் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் பசுமாடுகளுடன் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் தலைமையில் மாவட்டத்தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் நடராஜன், மகேந்திரன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து கோரிக்கை நிறைவேற வலியுறுத்துவோம் என்று போலீசார் உறுதியளித்தனர். அதனை ஏற்று பால் உற்பத்தியாளர்கள் கலைந்து சென்றனர்.

    இதுபற்றி பால் உற்பத்தியாளர்கள் கூறும்போது, மாட்டுத்தீவனங்கள் விலை அதிகரித்து விட்டது. தற்போது ஒரு லிட்டர் பசும்பால் ரூ.32-க்கும், எருமைப்பால் ரூ.41-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை எங்களின் வாழ்வாதாரத்தை காப்பதாக இல்லை.

    தற்போது ஒரு தண்ணீர் பாட்டில் ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் பாலுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

    Next Story
    ×