search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறி மோசடி- பொதுமக்கள் பிடித்து கொடுத்த திருடர்களை விடுவித்த போலீஸ்
    X

    பொதுமக்கள் பிடித்து கொடுத்த வடமாநில திருடர்கள்.

    நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறி மோசடி- பொதுமக்கள் பிடித்து கொடுத்த திருடர்களை விடுவித்த போலீஸ்

    • வடமாநிலத்து இளைஞர்கள் பாலீஷ் செய்து கொடுத்த கொலுசுகள் சிறிது நேரத்தில் தனித்தனியே கழன்று விழத் தொடங்கியது.
    • ஒரு மாதத்திற்கு முன்பாக வாங்கிய புது கொலுசுக்கும் அதே நிலை ஏற்பட்டதால் அப்பகுதி பெண்கள் அதிர்ந்து போய் சுதாரிக்க தொடங்கினர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட செல்லான் காலனி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடி இன மலைவாழ் மக்கள் குடிசை போட்டு வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியின மலைவாழ் மக்கள் தங்கத்தால் ஆபரணங்கள் செய்து போட முடியாத நிலையில் இவர்கள் அப்பகுதியில் உள்ள தோட்ட வேலைக்குச் சென்று சிறிது சிறிதாக சேர்த்து காலில் வெள்ளி கொலுசு மட்டுமே அணிவது வழக்கம்.

    இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ்ஷா, முகேஷ் குமார், அம்ரித் யாதவ் ஆகிய 3 வட மாநில இளைஞர்கள் வீடுகளில் இருந்த பெண்களிடம் காலில் அணிந்துள்ள கொலுசுகளை பாலிஷ் செய்யும் பவுடர் உள்ளது. அந்த பவுடர் வெறும் ரூ.20 மட்டும்தான், நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என முதலில் கூறி பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பெண்கள் பாலீஷ் போட கொலுசுகளை கொடுக்க முன்வராத நிலையில் நானே உங்களுக்கு பாலிஷ் போட்டு காட்டுகிறேன் என்று கூறி வலுக்கட்டாயமாக லட்சுமி என்ற பெண் அணிந்திருந்த கொலுசை வடமாநில இளைஞர் கழற்றி அவர்கள் வைத்திருந்த பவுடரை தடவி வேதிப்பொருட்கள் நீரில் மூழ்கடித்துள்ளனர். அப்போது கொலுசை மூழ்கடித்த நீரானது கொதிக்கத் தொடங்கிய நிலையில் மீண்டும் எடுத்த போது அந்த கொலுசு முழுவதும் கருப்படைந்ததாகவும், அதனை மீண்டும் சீயக்காய் பவுடரை போட்டு தேய்த்து நீரில் கழுவி கொடுத்துள்ளனர். பாலீஷ் செய்த கொலுசை பெண்களிடம் கொடுக்கும் போது தற்பொழுது போட வேண்டாம் ஒரு மணி நேரம் கழித்து அணிந்து கொள்ளுங்கள் எனக் கூறி அடுத்தடுத்து 3 பெண்களின் கொலுசுகளை இதே போன்ற முறையில் பாலீஷ் செய்து கொடுத்துள்ளனர்.

    வடமாநிலத்து இளைஞர்கள் பாலீஷ் செய்து கொடுத்த கொலுசுகள் சிறிது நேரத்தில் தனித்தனியே கழன்று விழத் தொடங்கியது. ஒரு மாதத்திற்கு முன்பாக வாங்கிய புது கொலுசுக்கும் அதே நிலை ஏற்பட்டதால் அப்பகுதி பெண்கள் அதிர்ந்து போய் சுதாரிக்க தொடங்கினர். வட மாநிலத்து இளைஞர் ஒருவரின் பையைப் பிடுங்கி வைத்த நிலையில் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர். அந்த நேரத்தில் எதிரே வந்த மற்ற இளைஞர்கள் அவர்கள் 3 பேரையும் விரட்டி பிடித்தனர். அவர்களிடம் கொலுசுகள் அனைத்தும் தனித்தனியாக துண்டாகி உள்ளது குறித்து கேட்டபோது, நீங்கள் கொடுத்த கொலுசு பழையது என்பதால் அப்படித்தான் இருக்கும் என்று முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளனர்.

    இதனால் அவர்கள் 3 பேரையும் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெரியகுளம் வடகரை போலீசார் அவர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் இதே போன்று பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. திண்டுக்கல் புறநகர் பகுதியில் குடியிருந்து வெவ்வேறு ஊர்களுக்கு சென்று நகைகளை பாலீஷ் செய்து தருவதாக கூறி மோசடி செய்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் பழங்குடியின மலைவாழ் மக்களிடம் நீங்கள் புகார் கொடுத்தால் அந்த 3 கொலுசுகளும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வக்கீல்களுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும். இதற்கெல்லாம் தயாரா? என போலீசார் கேட்டுள்ளனர். இதனால் தங்கள் கொலுசு பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் புகார் கொடுக்காமல் திரும்பி வந்துவிட்டனர். இதனால் மோசடி செய்த கும்பலை வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் விட்டு விட்டனர். பழங்குடியின மலைவாழ் மக்களின் அறியாமையை பயன்படுத்தி போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் திருடர்களை விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×