என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வங்கி மேலாளர் மனைவியை வீடு புகுந்து கடத்திய கும்பல்
- சிம்காவின் உறவினர்கள் செல்வராஜ், சின்னத்துரை, ராஜாங்கம் உள்ளிட்ட 20 பேர் 2 கார்களில் இரவு ரகுவரன் வீட்டிற்கு வந்தனர்.
- அவர்கள் தகராறு செய்து வலுக்கட்டாயமாக சிம்காவை காரில் கடத்தி சென்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எம். நகரை சேர்ந்தவர் ரகுவரன் (வயது 35). இவர் விருதுநகரில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் சமீபத்தில் சிம்கா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இது கலப்பு திருமணம் ஆகும். இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் சிம்காவின் உறவினர்கள் செல்வராஜ், சின்னத்துரை, ராஜாங்கம் உள்ளிட்ட 20 பேர் 2 கார்களில் இரவு ரகுவரன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் தகராறு செய்து வலுக்கட்டாயமாக சிம்காவை காரில் கடத்தி சென்றனர்.
இதனை தடுத்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஆண்டனி மற்றும் சிம்கா வேலை பார்த்து வந்த நிறுவனத்தை சேர்ந்த ஜெகநாத், ஸ்டீபன் ஆகியோரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி ரகுவரன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் பெண்ணை கடத்தி சென்ற கார்களை பின்தொடர்ந்து சென்று பிடிக்க முயன்றனர். இதில் ஒரு காரில் சென்றவர்களை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடத்தி செல்லப்பட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். வங்கி மேலாளர் மனைவியை உறவினர்கள் கடத்தி சென்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






