search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே விபத்தில் மாணவன் பலி- தம்பதி படுகாயம்
    X

    போச்சம்பள்ளி அருகே விபத்தில் மாணவன் பலி- தம்பதி படுகாயம்

    • விபத்தை ஏற்படுத்திய சிவபாரத் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
    • விபத்தை ஏற்படுத்தியவரும், இறந்தவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் அப்பு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தனுஷ் (வயது16). இவர் நேற்று இரவு இந்திரா நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சிவபாரத் (21) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக தனுஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து சிவபாரத் மீண்டும் அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த புதுயுகம் மற்றும் அவரது மனைவி கவுரம்மாள் ஆகியோர் மீது மோதினார். இதில் அந்த தம்பதிகள் காயமடைந்தனர். இதனால் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த தனுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் முயன்றபோது தனுஷின் உறவினர்கள் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தப்பட்டு இறந்த தனுஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய சிவபாரத் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

    விபத்தை ஏற்படுத்தியவரும், இறந்தவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×