என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரியபாளையத்தில் ஊராட்சி செயலர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
- பள்ளி முடிந்து மகன்கள் வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பட்டுப்புடவைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள அக்கரபாக்கம் கிராமம், மேட்டு காலனியில் வசித்து வருபவர் தேன்மொழி. இவர் பூரிவாக்கம் ஊராட்சிமன்ற செயலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மதன்குமார் பாலவாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை மதன்குமார் வேலைக்கு சென்று விட்டார்.
மகன்கள் இருவரும் பள்ளிக்குச் சென்றவுடன் தேன்மொழி வீட்டை பூட்டி விட்டு பூரிவாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றார்.இந்த நிலையில், பள்ளி முடிந்து மகன்கள் வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பட்டுப்புடவைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள், ரொக்கப் பணம் சுமார் ரூ.50 ஆயிரம் உள்ளிட்டவை கொள்ளை போயிருந்தன. இது குறித்து தேன்மொழி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.