search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்- 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
    X

    ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்- 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

    • கடந்த மே மாதம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வருவாய் துறையினர் சென்ற போது அங்கு வசித்து வரும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • அப்போது அதிகாரிகளிடம் கால அவகாசம் மற்றும் மாற்று இடம் வழங்குமாறு கேட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி ராயர்பாளையம் செங்குட்டை பகுதியில் 42 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பல்லடம் வட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செங்குட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அங்கு வசிக்கும் மக்களுக்கு வருவாய் துறை மூலம் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    கடந்த மே மாதம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வருவாய் துறையினர் சென்ற போது அங்கு வசித்து வரும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதிகாரிகளிடம் கால அவகாசம் மற்றும் மாற்று இடம் வழங்குமாறு கேட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    மனுவை நிராகரித்த நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை நேற்று 8-ந்தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டது.

    இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு பல்லடம் தாசில்தார் நந்தகோபால், டி.எஸ். பி. வெற்றிச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், ரவி, மணிகண்டன், பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார், தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மாற்று இடம் வழங்கி விட்டுத்தான் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் நந்தகோபால், டி.எஸ். பி. வெற்றி செல்வன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது அந்த பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, காளியம்மாள், மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் தங்கள் உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பகுதி மக்கள் மாற்று இடம் வழங்கக்கூடிய பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் என்ற இடத்தை பார்வையிடச் சென்றனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    Next Story
    ×