என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவையில் குடியிருப்பு பகுதியில் புதிய மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு- சாலை மறியல்
- கோவில், பஸ் நிறுத்தம், குடியிருப்பு, மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் மதுபார் அமைக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக முத்தியால்பேட்டையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை நகரில் பல இடங்களில் ரெஸ்டோ பார் என்ற பெயரில் டிஸ்கோத்தே நடனத்துடன் கூடிய மதுபார் அமைக்க கலால்துறை அனுமதி வழங்கி வருகிறது.
புதுவையில் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ள நிலையில் புதிதாக ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்குவதற்கு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் எதிர்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுவை முத்தியால்பேட்டையில் ஏழை மாரியம்மன் கோவில் அருகே ரெஸ்டோபாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது.
கோவில், பஸ் நிறுத்தம், குடியிருப்பு, மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் மதுபார் அமைக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக முத்தியால்பேட்டையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, மதுக்கடை அமைக்கப்படும் பகுதியில் இன்று காலை ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்டு சேதுசெல்வம், ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் தேவசகாயம் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் இதில் பங்கேற்றனர்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக கிழக்கு கடற்கரை சாலை முத்தியால்பேட்டை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மறியலை போராட்டக்காரர்கள் கைவிடவில்லை.
இதனால் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது. இதனையடுத்து, போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பினார்கள்.
ஒரு மணி நேரம் மறியல் தொடர்ந்தது. இதனையடுத்து தாசில்தார் குமரன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வருமானம் என்ற பெயரில் குடியிருப்பு பகுதியில் நடனமதுபார் அமைக்க அனுமதி வழங்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் சேது செல்வம் மற்றும் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரத்தி ற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






