என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே மேம்பால பணியை முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
    X

    செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே மேம்பால பணியை முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

      திருவள்ளூர்:

      சென்னை அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் அமைந்துள்ளது.

      இந்த ரெயில் நிலையத்தின் அருகே ஆவடி சாலையுடன் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலமானது கட்டும் பணி தொடங்கி நடந்து வந்தது.

      இந்த பணிகள் 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டு 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்படு உள்ளது. இதனால் செவ்வாப்பேட்டை திருவூர், அரண்வாயில் சேர்ந்த பொது மக்கள் மருத்துவம், பள்ளி கல்லூரி உள்ளிட்ட பிற பணிகளுக்கு செல்வோர் மூன்று கிலோ மீட்டர் துாரம் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

      இந்த நிலையில் தற்காலிகமாக செவ்வாய்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் செல்வதற்காக ஆயத்தப்படுத்தி கொடுத்திருந்த நிலையில் தற்போது மழையின் காரணமாக அந்த ரெயில்வே பாலத்தின் கீழ் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

      இதன் காரணமாக அவ்வழியே செல்லும் பொதுமக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

      இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று மாலை புறநகர் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      மேலும் இன்று மேம்பாலம் அருகே ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி சாலையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாப்பேட்டை-திருவூர் செல்லும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

      பூந்தமல்லி சரக உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி, திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

      Next Story
      ×