என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற பனியன் தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பினர்
- தீபாவளி பண்டிகை முடிந்ததையடுத்து தொழிலாளர்கள் பலர் திருப்பூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். இன்று பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்தனர்.
- நெல்லை, நாகர்கோவில், மதுரை, சேலம், தேனி, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு திருப்பூரில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். தொழிலாளர்களின் வசதிக்காக ஒரு வாரம் வரை பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.
பண்டிகை முடிந்ததையடுத்து தொழிலாளர்கள் பலர் திருப்பூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். இன்று பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்தனர்.
இதனால் நெல்லை, நாகர்கோவில், மதுரை, சேலம், தேனி, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டது.
தொழிலாளர்கள் திரும்பியதையடுத்து திருப்பூரில் மீண்டும் ஆடை உற்பத்தி வேகமெடுக்கும். இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையின் போது குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கும் மேல் தொழிலாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதன் பின்னர் பண்டிகையை முடித்து விட்டு திருப்பூருக்கு திரும்புவார்கள்.
பல நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை அளித்தன. இன்று பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்பூர் வந்து விட்டனர். இதனால் ஆடை தயாரிப்பு முன்பு போல் தொடங்கி விடும் என்றனர். பனியன் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் திருப்பூர் மாநகரம் கடந்த ஒரு வாரம் வெறிச்சோடி காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலும் சற்று குறைந்து இருந்தது.
இன்று தொழிலாளர்கள் திரும்பியதால் திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோவில் வழி பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.