search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியைச் சேர்ந்த படுகர் சமுதாய பெண், விமான பைலட்டாகி சாதனை
    X

    கோத்தகிரியைச் சேர்ந்த படுகர் சமுதாய பெண், விமான பைலட்டாகி சாதனை

    • கோத்தகிரியை சேர்ந்த இளம்பெண் ஜெயஸ்ரீ என்பவர் தென்னாப்பிரிக்காவில் விமானப்பயிற்சி முடித்து தற்போது அங்கேயே விமானியாகி உள்ளார்.
    • மலைவாழ் மக்களான படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் விமான பைலட்டாகி சாதனை படைத்துள்ளது அந்த சமுதாய மக்களை பெருமை அடையச் செய்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள மலையோர கிராமங்களில் படுகர் சமுதாய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களின் குடும்பத்தில் பலர் கடந்த சில ஆண்டுகளாக மேற்படிப்பு முடித்து, மத்திய-மாநில அரசுகளில் பெரிய, பெரிய பதவிகளை அலங்கரித்து வருகின்றனர்.

    இந்த வகையில் கோத்தகிரியை சேர்ந்த இளம்பெண் ஜெயஸ்ரீ என்பவர் தென்னாப்பிரிக்காவில் விமானப்பயிற்சி முடித்து தற்போது அங்கேயே விமானியாகி உள்ளார். மலைவாழ் மக்களான படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் விமான பைலட்டாகி சாதனை படைத்துள்ளது அந்த சமுதாய மக்களை பெருமை அடையச் செய்துள்ளது.

    சாதனை படைத்த ஜெயஸ்ரீ கூறியதாவது:-

    படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த நான் கோத்தகிரி பகுதியில் உள்ள நெடுகுளாகுருக்கத்தி கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். என் தந்தை மணி கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். தாய் மீரா இசை ஆசிரியை.

    நான் கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். அப்போது எதிர்காலத்தில் விமானியாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதனை நான் என் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர்.

    எங்கள் சமுதாயத்தில் பெரும்பாலான இளம்பெண்கள் வெளியூர் சென்று தங்கி பட்டப்படிப்பு முடிப்பது இல்லை. எனவே உறவினர்கள் பலரும் நான் வெளியூர் சென்று தங்கி மேல்படிப்பு முடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் எங்களுக்கு ஜெயஸ்ரீயின் எதிர்கால கனவுதான் முக்கியம் என பெற்றோர் உறுதியாக இருந்தனர்.

    இதனை தொடர்ந்து நான் கோவை பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். ஆனால் எனக்கு அந்த கல்லூரியில் ஏரோநாட்டிகல் பிரிவு கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் நான் மனதை திடப்படுத்தி கொண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். இரவும் பகலும் கஷ்டப்பட்டு படிப்பை முடித்தேன்.

    எனக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. அதன்பிறகு நான் கிட்டத்தட்ட பைலட் கனவை மறந்து விட்டேன். இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே நான் வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தேன்.

    அப்போது தான் எனக்குள் இருந்த பைலட் கனவு மீண்டும் துளிர்விட்டது. இதுகுறித்து நான் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களும் நான் பைலட் படிப்பு படிக்க சம்மதம் தெரிவித்தனர்.

    எனவே நான் உடனடியாக தென்னாப்பிரிக்காவுக்கு சென்று அங்கு உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பைலட் பட்டயப்படிப்பு முடித்தேன். இதன் பயனாக நான் தற்போது விமானியாக வேலைபார்த்து வருகிறேன். தற்போது என்னிடம் பிரைவேட் பைலட் லைசென்ஸ் சான்றிதழ் உள்ளது. அடுத்தபடியாக வர்த்தக பைலட் லைசென்ஸ் படிப்புக்கு தயாராக வேண்டும்.

    நீலகிரியில் படுகர் சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த நான் இன்றைக்கு உலகளவில் சாதனை படைத்து உள்ளேன் என்றால் அதற்கு என் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கம்தான் காரணம்.

    நான் பெண்களுக்கு கூறும் அறிவுரை என்னவென்றால் நீங்கள் படிக்கும்போதே எதிர்காலத்தில் என்னவாக போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அதன்படி உங்கள் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் பயணியுங்கள். அப்படி செய்தால் உங்களின் எதிர்கால கனவு நிச்சயம் வசப்படும். தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயஸ்ரீ, படுகர் சமுதாயத்தில் விமான பைலட்டாகும் முதல் பெண் என்ற சாதனையையும் படைத்து இருக்கிறார். அவருக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    Next Story
    ×