என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் இன்று மாலை நல்லடக்கம்
    X

    ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் இன்று மாலை நல்லடக்கம்

    • பழனியம்மாள் நாச்சியாரின் இறுதி சடங்கு இன்று மாலை 4.30 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
    • பழனியம்மாள் நாச்சியாரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், உள்ளூர் பிரமுகர்களும், பொதுமக்களும் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

    பெரியகுளம்:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது95). முதுமை காரணமாக கடந்த மாதம் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தேனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 22ந் தேதி மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்பத்திரிக்கு சென்று தனது தாயாரை பார்த்து விட்டு உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

    இந்நிலையில் நேற்று பழனியம்மாள் நாச்சியார் உடல் மீண்டும் கவலைக்கிடமானது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால் வயது முதிர்வு காரணமாக அந்த மருத்துவ சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்கவில்லை.

    இதனால் அவர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார். ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே பழனியம்மாள் நாச்சியாரின் உயிர் இரவு 10.02 மணியளவில் பிரிந்தது. இது குறித்து சென்னையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக அவர் விமானம் மூலம் திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து காரில் தனது வீட்டிற்கு வந்தார். இறந்த தாயாரின் உடலைப்பார்த்து அவர் கதறி அழுதார். தாயின் காலைப்பிடித்து ஓ.பன்னீர்செல்வம் கதறி அழுதது அங்கிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இறந்த பழனியம்மாள் நாச்சியார் பெரியகுளம் ஓட்டக்காரத்தேவரின் மனைவியாவார். இவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், கஜேந்திரன், ராஜா, பாலமுருகன், சண்முகசுந்தரம் ஆகிய 5 மகன்களும், அமுதா, பேச்சியம்மாள், சாமுண்டீஸ்வரி, ஜெயச்சித்ரா ஆகிய 4 மகள்களும் உண்டு. இவர்களில் தற்போது 7 பேர் உள்ளனர். பழனியம்மாள் நாச்சியாரின் இறுதி சடங்கு இன்று மாலை 4.30 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    பழனியம்மாள் நாச்சியாரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், உள்ளூர் பிரமுகர்களும், பொதுமக்களும் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×