search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை சிறைச்சாலையில் அடையாள சின்னம் அமைக்க நடவடிக்கை- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
    X

    பாளை சிறையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்ய வந்த போது எடுத்தபடம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாளை சிறைச்சாலையில் அடையாள சின்னம் அமைக்க நடவடிக்கை- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

    • கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் சிறை அங்காடியில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
    • இந்தியாவிலேயே அதிநவீன வசதிகளுடன் சிறைச்சாலைகள் தமிழகத்தில் தான் உள்ளது. இங்கு தான் சிறையில் வேலை செய்யும் கைதிகளுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று பாளை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சிறையில் உள்ள கைதிகள் அறைகள், அங்குள்ள பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாளை மத்திய சிறையை பொறுத்தவரை தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 1,378 பேர் உள்ளனர். ஆனால் இங்கு 1,332 கைதிகளுக்கு மட்டுமே இடம் உள்ளது. எனவே கூடுதலாகத்தான் கைதிகள் இருக்கிறார்கள்.

    எனினும் அவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? அவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா? போதிய மருத்துவ வசதிகள் உள்ளனவா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் சிறை அங்காடியில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.

    இந்தியாவிலேயே அதிநவீன வசதிகளுடன் சிறைச்சாலைகள் தமிழகத்தில் தான் உள்ளது. இங்கு தான் சிறையில் வேலை செய்யும் கைதிகளுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.

    புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தனியாக ஒரு அமர்வு நீதிமன்றம் வேண்டும். அதன்படி தென்காசி மாவட்டத்துக்கும் தனியாக ஒரு மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்திடம் கேட்டுள்ளோம்.

    உயர்நீதிமன்றத்தில் கருத்துரு பெற்று விரைவில் மாவட்ட நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த 3 வருடங்களாக சிவில் நீதிபதிகள் தேர்வு நடைபெறாமல் உள்ளது. நீதிபதிகள் காலி பணியிடம் என்பதை பொறுத்தவரை, உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட ஒரு நியமன குழு உள்ளது. அவர்கள் தமிழ்நாடு தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிட்டு தேர்வு செய்வார்கள். அதற்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்கும்.

    மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல் என்று புகார்கள் கூறப்படுகிறது. ஆனால் அங்கு அந்த அளவுக்கு வருவாய் இல்லை. இருந்த போதும் அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    பழைய சிறைச் சாலைகளை புதுப்பிக்க இரட்டிப்பு செலவாகும் என்பதால் புதிதாகவே கட்டலாம் எனவும், அதற்கான இடத்தை வருவாய் துறையினர் தேர்வு செய்து கொடுத்தால் உடனடியாக அதற்கான பணிகளை தொடங்கலாம் எனவும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    பாளை மத்திய சிறையை பொறுத்தவரை புதுப்பிக்க வேண்டும் என்றால் ரூ.500 கோடி செலவாகும். அதற்கு பதிலாக புதிதாக சிறைச்சாலை கட்ட வருவாய் துறையினர் இடம் தேர்வு செய்து கொடுத்தால் புதிதாக சிறைச்சாலை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    கைதிகளின் திறமைக்கேற்ப வேலைக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    சிறைச்சாலைகளில் 2-ம் நிலை காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாளை சிறைச்சாலையில் கலைஞர் சிறை வைக்கப்பட்ட அறை உள்ளது. இது தி.மு.க.வினருக்கு கோவில் போன்றது.

    தி.மு.க. நூற்றாண்டு விழாவையொட்டி அவர் இருந்த அறையில் அடையாள சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நீண்ட காலம் சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிப்பது தொடர்பாக அனைத்து கோப்புகளும் தயார் நிலையில் உள்ளது.

    ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அதன் பின்பு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×