search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே ஒய்யாரமாக சாலையை கடந்துஊருக்குள் சுற்றிய பாகுபலி யானை
    X

    மேட்டுப்பாளையம் அருகே ஒய்யாரமாக சாலையை கடந்துஊருக்குள் சுற்றிய பாகுபலி யானை

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம், சமயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாகுபலி காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்தது.
    • பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்ததால் பாகுபலி யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சமயபுரம் அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம், சமயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாகுபலி காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்தது.

    இந்த யானை ஊருக்குள் புகுவதும், அங்குள்ள விளை நிலங்களில் பயிர்களை தின்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தது. ஆனால் மனிதர்கள் யாருக்கும் அந்த யானை தொந்தரவு கொடுக்கவில்லை.

    பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்ததால் பாகுபலி யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை சென்று விட்டதால் அதனை பிடிக்கவில்லை. தொடர்ந்து யானையை கண்காணித்து வந்தனர்.

    இதற்கிடையே பாகுபலி யானை சிறுமுகை வனப்பகுதியில் உள்ள அடர் வனப்பகுதியில் முகாமிட்டு அங்கேயே இருந்தது.

    தற்போது வனத்தில் வறட்சி தொடங்கியதால் பாகுபலி யானை 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் உணவு, தண்ணீர் தேடி தான் முதலில் சுற்றி திரிந்த மேட்டுப்பாளையம் பகுதியை நோக்கி வந்தது.

    நேற்று இரவு மேட்டுப்பாளையம்- வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள சமயபுரம் பகுதியில் பாகுபலி யானை வந்தது.

    யானை வனத்தை விட்டு வெளியேறி அந்த வழியாக செல்லும் சாலையை ஒய்யார நடைபோட்டு கடந்து சமயபுரம் ஊருக்குள் நுழைந்தது.

    அங்குள்ள தெருக்களில் யானை சிறிது நேரம் சுற்றி திரிந்தது. ஆனால் யானை யாருக்கும் எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் சுற்றி திரிந்து விட்டு மீண்டும் வனத்திற்குள் சென்று விட்டது.

    இந்த பாகுபலி யானை எவரையும் தாக்கியது இல்லை என்பதால் அப்பகுதி மக்களும் இதனை சர்வ சாதாரணமாக கடந்து செல்கின்றனர். இருப்பினும் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சாலையை கடந்து வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த இரு மாதங்களாக பாகுபலி காட்டு யானை எங்கள் பகுதிக்கு வரவில்லை. தற்போது மீண்டும் பாகுபலி யானை ஊருக்குள் வலம் வரத்துடன் தொடங்கியுள்ளது.

    எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பாகுபலி யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×