search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை அருகே குடிபோதையில் தொழிலாளி வீட்டுக்கு தீ வைத்த வாலிபர்
    X

    மதுரை அருகே குடிபோதையில் தொழிலாளி வீட்டுக்கு தீ வைத்த வாலிபர்

    • குடிபோதையில் ராசாத்தி வீட்டுக்கு தீவைத்தது தெரியவந்தது. இதையடுத்து பவுல்ராஜை சாப்டூர் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அணைக்கரைபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ராசாத்தி (வயது 42). ராஜேந்திரன் கூலித்தொழிலாளி ஆவார். அவர் தனது குடும்பத்துடன் தகரக்கொட்டகை வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ராசாத்தி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார். அப்போது மதிய நேரத்தில் அவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த ராசாத்தி தனது வீட்டுக்கு வந்து பார்த்தார்.

    அப்போது வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து கிடந்தன. மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 500, 200, 100 ரூபாய் என ரூ.2 லட்சம் பண நோட்டுகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள ஆவணங்கள் தீயில் எரிந்துவிட்டது.தன்னுடைய வீட்டுக்கு யாரோ தீவைத்து விட்டதாக சாப்டூர் போலீசில் ராசாத்தி புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் அணைக்கரைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த பவுல்ராஜ் (வயது 45) என்பவர் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் பவுல்ராஜை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அப்போது குடிபோதையில் ராசாத்தி வீட்டுக்கு தீவைத்தது தெரியவந்தது. இதையடுத்து பவுல்ராஜை சாப்டூர் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை மானூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் காசிமாயன். விவசாயியான இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பில் தீ விபத்து ஏற்பட்டு கொழுந்து விட்டு எரிந்தது.

    உடனே அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். ஆனால் வைக்கோல் படப்பு முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஏழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து வைக்கோல் படப்புக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? அல்லது விபத்தா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×