என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொடைக்கானல் தனியார் தங்கும் விடுதியில் மதுரை தம்பதி தூக்கிட்டு தற்கொலை
- அறையில் உள்ள கழிவறைக்கு சென்று பார்த்தபோது 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- தம்பதி தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானல்:
மதுரை தல்லாகுளம் மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி 6-வது தெருவில் மளிகை கடை நடத்தி வந்தவர் ராஜ்குமார்(46). இவரது மனைவி சித்ராபுஷ்பம் (42). இவர்களுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணமாகி இதுவரை குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 2 பேரும் சித்ரா புஷ்பத்தின் தாயார் மாசிலாராஜபாண்டியுடன் (76) கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.
கடந்த 3 தினங்களாக சுற்றுலாதலங்களை கண்டு ரசித்து விட்டு நேற்று இரவு பஸ் நிலையம் அருகே இருந்த தங்கும் அறைக்கு திரும்பியவர்கள் வெகு நேரம் முழித்திருந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதில் வயதான மாசிலா மூதாட்டி தூங்கிவிட்டதை தொடர்ந்து கணவன்-மனைவி 2 பேரும் கழிவறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அதிகாலையில் கண்விழித்த மூதாட்டி 2 பேரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதனை தொடர்ந்து தங்கும் அறையில் உள்ள கழிவறைக்கு சென்று பார்த்தபோது 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் பதட்டமான மூதாட்டி தங்கும் விடுதி மேலாளரிடமும் அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருந்தவர்களிடம் இது குறித்து தெரிவிக்கவே அவர்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட தம்பதியின் உடல்களை மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சனையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்களா, திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத மனக்கவலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தால் அண்ணாசாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






