search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே கேரளாவில் இருந்து கோழி கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு
    X

    களியக்காவிளை அருகே கேரளாவில் இருந்து கோழி கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

    • லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள், அதனை மரியகிரி பகுதியில் மடக்கி பிடித்தனர்.
    • அபராத தொகை கட்டிய பின்னர் வாகனம் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    களியக்காவிளை:

    கேரள-தமிழக எல்லைப்பகுதியான குமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக தினமும் சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் சென்று வருகின்றன.

    இதில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காலியான சரக்கு வாகனங்கள், பணத்திற்கு ஆசைப்பட்டு கேரளாவில் இருந்து புழுக்கள் நெளியும் மீன், கோழி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டி செல்லும் நிலை உள்ளது. இந்தச் செயல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

    இதனால் இங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிப்பை சந்தித்து வருகின்றன. சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. அந்த வழியே செல்பவர்கள் துர்நாற்றம் காரணமாக மூக்கை பிடித்துக் கொண்டு சென்று வருகின்றனர். எனவே கழிவுகள் வரும் லாரியை தடுத்து நிறுத்த வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், கேரள கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை கேரளாவில் இருந்து களியக்காவிளை போலீஸ் வாகன சோதனை சாவடியை கடந்து ஒரு கண்டெய்னர் லாரி வேகமாக வந்தது.

    அந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள், அதனை மரியகிரி பகுதியில் மடக்கி பிடித்தனர். ஆனால் லாரி பக்கத்தில் பொதுமக்களை செல்ல விடாமல், அதன் டிரைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை சோதனை செய்த போது அதில் கோழி கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து டிரைவரிடம் விசாரணை செய்த போது, கோழி கழிவுகளை கேரளாவில் இருந்து தமிழகத்தில் கொட்டுவதற்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார், இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு கோழிக்கழிவுகளை கொண்டு வந்த வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    அபராத தொகை கட்டிய பின்னர் அந்த வாகனம் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    Next Story
    ×