search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் தி.மு.க. வெற்றி
    X

    உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் தி.மு.க. வெற்றி

    • வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
    • உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு கடந்த 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 10 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இந்த நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் குவிந்து இருந்தனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் சுப்பராயன் உள்பட 6 பேர் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 4,510 வாக்காளர்களில் 2,597 பேர் வாக்களித்து இருந்தனர். 57.58 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    ஆரம்பம் முதலே தி.மு.க. வேட்பாளர் சுப்பராயன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அவர் மொத்தம் 1759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    சுயேட்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. பிரமுகர் வேணுகோபால் 568 வாக்குகள் பெற்று இருந்தார். தி.மு.க.வேட்பாளர் சுப்பராயன் 1191 அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

    இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 உறுப்பினர்களில் தி.மு.க. கவுன்சிலர்களின் பலம் 34 ஆக அதிகரித்து உள்ளது. அ.தி.மு.க.-8, பா.ம.க.-2, பா.ஜனதா-1, சுயேட்சைகள்-6 உறுப்பினர்கள் உள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் 15-வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.சார்பில் சுதா உள்பட 6 பேர் களத்தில் இருந்தனர். ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் சுதா முதல் சுற்றில் 478 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். சுயேட்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. பிரமுகர் யோகசுந்தரி 311 வாக்குகளும் பெற்று உள்ளனர்.

    இதேபோல் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் கிராம ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினராக வேணி கண்ணன் வெற்றி பெற்றார். பதிவான 603 ஓட்டுகளில் அவர் 368 வாக்குகள் பெற்று இருந்தார். 4 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.சார்பில் சேகா் உள்பட 7 பேர் போட்டியிட்டனர். இதில் அதிக வாக்குகள் பெற்று தி.மு.க.வேட்பாளர் சேகர் வெற்றி பெற்றார்.

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினராக சீத்தாராமன் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் உள்ள 259 வாக்குகளில் 152 வாக்குகள் பெற்று இருந்தார். 3 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

    சோழவரம் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 8-வது வார்டு உறுப்பினராக செல்வன் வெற்றி பெற்றார். பதிவான 509 வாக்குகளில் 187 ஓட்டுகள் பெற்று இருந்தார்.

    பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் அகரமேல் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினராக தி.மு.க.வை சேர்ந்த ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான 329 ஓட்டுகளில் அவர் 161 வாக்குகள் பெற்று இருந்தார். 7 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

    உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×