என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி சென்னையை சேர்ந்த பெண் பலி
- சந்திரனும், அவரது மகன், மகள் ஆகியோர் படுகாயத்துடன் காரின் இடி பாடுகளுக்குள் சிக்கி கிடந்தனர்.
- விபத்து குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது47). இவர் தனது மனைவி நாகரெத்தினா (42), மகள் சோவிதா (14), மகன் லட்சுமண சிவசுப்ரமணியன் (8) ஆகியோருடன் ஒரு காரில் கிருஷ்ணகிரி வந்து விட்டு நேற்று மீண்டும் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். காரை சந்திரன் ஓட்டி வந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை-கிருஷ்ணகிரி சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் நாகரெத்தினா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். சந்திரனும், அவரது மகன், மகள் ஆகியோர் படுகாயத்துடன் காரின் இடி பாடுகளுக்குள் சிக்கி கிடந்தனர்.
இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகரெத்தினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் மூலம் கார் சாலை ஓரமாக அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த விபத்து குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






