என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் உறைபனி சீசனால் நடைபயிற்சி செல்வோர் தவிப்பு
- மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது உறைபனி சீசன் தொடங்கி உள்ளது.
- உறைபனி மேலும் அதிகரிக்கும் என வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கொடைக்கானல்:
கொடைக்கானலில் உறைபனி சீசன் தொடங்கியதால் காலை நேரங்களில் அறைகளிலேயே சுற்றுலாப்பயணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது உறைபனி சீசன் தொடங்கி உள்ளது. ஒவ்வொரு வருட குளிர் காலங்களிலும் நவம்பர் மாத இறுதியிலேயே உறைபனி சீசன் தொடங்குவது வழக்கம். இந்த வருடம் அவ்வப்போது தோன்றிய புயல் சின்னம் மற்றும் தொடர் மழை காரணமாக உறைபனி சீசன் தாமதமாக தொடங்கி உள்ளது. நேற்று மாலை வரை கடும் குளிர் நிலவி வந்த நிலையில் இன்று காலை நட்சத்திர ஏரியின் மேற்பரப்பிலும், ஏரிப்பகுதியை ஒட்டிய ஜிம்கானா மைதான புல்வெளிகளிலும், ஏரிச்சாலை பகுதியிலும் உறைபனி தென்பட்டது. அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மேற்பரப்பிலும் உறைபனி தென்பட்டது.
இனி வரும் காலங்களில் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் புல்வெளிகள் கருகும் சூழல் உருவாகும். இதன் காரணமாக பிரையண்ட் பூங்காவில் பூக்கள் கருகும் சூழல் ஏற்படாதவாறு வண்ண போர்வைகளால் போர்த்தி பாதுகாத்து வருகின்றனர். நட்சத்திர ஏரியிலும், ஏரியை ஒட்டிய ஜிம்கானா மைதான பகுதிகளிலும் வெண் கம்பளம் போர்த்தியது போல் உறைபனி தென்பட்டது. மேலும் காலை நேரங்களில் ஏரிச்சாலையை சுற்றி நடைபயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துள்ளது. இனி வரும் காலங்களில் உறைபனி மேலும் அதிகரிக்கும் என வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






