search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அரசு பள்ளியில் வகுப்பறையில் செக்ஸ் பாடம் நடத்திய ஆசிரியர் கைது
    X

    இரணியல் அரசு பள்ளியில் வகுப்பறையில் 'செக்ஸ்' பாடம் நடத்திய ஆசிரியர் கைது

    • வகுப்பறையில் அவரை எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவ-மாணவிகள் குறித்து தலைமை ஆசிரியரிடம் கூறி மாற்று சான்றிதழ் பெற வைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
    • ஆசிரியரின் மோசமான செய்கையால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு அச்சப்படுகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல் நிலைப்பள்ளியில் கணக்குப்பதிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் கிறிஸ்துதாஸ்.

    இவர் வகுப்பறையில் ஆபாசமாக பேசுவதாக பிளஸ்-1 மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.

    மேலும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் வந்தும் புகார் கொடுத்தனர். அதில், ஆசிரியர் கிறிஸ்துதாஸ் பிளஸ்-1 வகுப்பறையில், மாணவ-மாணவியரிடம் சம்பந்தமில்லாத வகையில் ஆபாசமாக பேசி முகம் சுளிக்கும் வகையில் 'செக்ஸ்' பாடம் நடத்தி வருகிறார்.

    வகுப்பறையில் அவரை எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவ-மாணவிகள் குறித்து தலைமை ஆசிரியரிடம் கூறி மாற்று சான்றிதழ் பெற வைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார். ஆசிரியரின் மோசமான செய்கையால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு அச்சப்படுகிறார்கள்.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் மாணவிகளின் பெற்றோர் கூறியிருந்தனர். இது தொடர்பாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து குளச்சல் மகளிர் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

    இதை தொடர்ந்து ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிறிஸ்துதாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆசிரியர் கிறிஸ்துதாஸ் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து கல்வித்துறை அதிகாரிகளும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.

    Next Story
    ×