search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்க புதையல் தருவதாக  கூறி ரூ.5 லட்சம் மோசடி- பெண் உள்பட 3 பேர் மீது ஓட்டல் அதிபர் புகார்
    X

    தங்க புதையல் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி- பெண் உள்பட 3 பேர் மீது ஓட்டல் அதிபர் புகார்

    • கோவை காந்திபுரத்துக்கு பணத்துடன் வந்தால் நகைகளை தருவதாக கூறினர்.
    • நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் முன்பு தங்க நகைகளுடன் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

    கோவை:

    திருப்பூர் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாலு ( வயது 45). இவர் அந்த பகுதியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் 15-ந் தேதி இவரது ஓட்டலுக்கு பெண் உட்பட 3 பேர் சாப்பிடுவதற்காக வந்தனர். அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு ஓட்டல் உரிமையாளர் பாலுவிடம் தங்களை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து வந்துள்ளதாக அறிமுகப்படுத்தினர்.

    அப்போது ஒரு நபர், நாங்கள் கோவையில் மேம்பால பணியில் ஈடுபட்டு வருகிறோம். அப்போது ஒரு நாள் குழி தோண்டும்போது அங்கு தங்க புதையல் கிடைத்தது. ஒரு குடுவையில் தங்க நகைகள் இருந்தன. அதனை குறைந்த விலையில் விற்க உள்ளோம் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து ஒரு தங்க கட்டி துண்டை கொடுத்தனர். அதனை வாங்கிய ஓட்டல் உரிமையாளர் பாலு பரிசோத்த போது அது சுத்தமான தங்கம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை தொடர்பு கொண்ட ஓட்டல் உரிமையாளர் பாலு உங்களிடம் எவ்வளவு தங்க நகை உள்ளது என கேட்டார். அதற்கு அவர்கள் மொத்தம் ரூ. 80 லட்சம் மதிப்பிலான 1¾ கிலோக தங்க நகைகள் இருப்பதாகவும், இதனை ரூ.5 லட்சத்துக்கு தருவதாகவும் கூறினர்.

    மேலும் கோவை காந்திபுரத்துக்கு பணத்துடன் வந்தால் நகைகளை தருவதாக கூறினர். அவர்கள் பேச்சில் மயங்கிய பாலு இதனை உண்மை என நம்பினார். பின்னர் தனது நகைகளை அடகு வைத்து ரூ. 5 லட்சம் பணத்தை திரட்டினார்.

    பின்னர் கடந்த மாதம் 20-ந் தேதி பணத்துடன் பாலு காரில் கோவை வந்தார். காந்திபுரத்தில் வைத்து அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் முன்பு தங்க நகைகளுடன் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

    அங்கு சென்ற பாலு அங்கு நின்று கொண்டு இருந்த 3 பேரிடம் ரூ. 5 லட்சம் பணத்தை கொடுத்து தங்க நகைகள் என நினைத்து தங்கத்தை வாங்கி திருப்பூர் சென்றார்.

    பின்னர் அந்த நகைகளை சோதனை செய்தபோது அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்கம் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலு இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி தங்க கட்டி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×