search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசிய அரசு பேருந்து கண்டக்டர் சஸ்பெண்டு
    X

    பள்ளி மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசிய அரசு பேருந்து கண்டக்டர் சஸ்பெண்டு

    • புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தின் எல்லை பகுதியாக குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமம் அமைந்துள்ளதால், போதிய பேருந்து வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகிறார்கள்.
    • பள்ளி, கல்லூரி நேரங்களில் தமிழக அரசு கூடுதல் பஸ் வசதி அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்திலிருந்து பள்ளி மாணவிகள் ஏராளமானோர் அருகிலுள்ள தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாணவிகள் பள்ளிக்குச் தஞ்சாவூருக்கு செல்லும் அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்தனர்.

    அப்போது அங்கு பணியில் இருந்து ஆலங்குடியை சேர்ந்த நடத்துனர் சுப்பிரமணி, கூட்ட நெருக்கடியால் படியில் நின்றவாறு பயணம் செய்த பள்ளி மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவிகள் குளத்தூர்நாயக்கர் பட்டியில் பேருந்திலிருந்து கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் பேருந்து முன்பாக சாலையில் அமர்ந்து நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசிய நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே பிரச்சினை தொடர்பாக புதுக்கோட்டை மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தினர்.

    அதில் நடத்துனர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நடத்துனர் சுப்பிரமணியை சஸ்பெண்டு செய்து அதிகாரி உத்தரவிட்டார். மேலும் சஸ்பெண்டு காலம் முடிந்ததும் அவரை பணியிட மாற்றம் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தின் எல்லை பகுதியாக குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமம் அமைந்துள்ளதால், போதிய பேருந்து வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகிறார்கள். எனவே பள்ளி, கல்லூரி நேரங்களில் தமிழக அரசு கூடுதல் பஸ் வசதி அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×