search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் வண்ண, வண்ண மலர்கள்
    X

    கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் வண்ண, வண்ண மலர்கள்

    • மலர் கண்காட்சிக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், தாவரவியல் பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்புகளில் தற்போது பெகுனியா மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு கோடை சீசனின் போதும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.

    மே மாதம் பூங்காவில் நடைபெறும் மலர்கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்செடிகள் நடவு செய்யப்பட்டன.

    மேலும் கோடை சீசனுக்காக டேலியா, பேன்சி, இன்கா மேரிகோல்டு, பிகோனியா, பிரமிளா, சால்வியா, பிரஞ்மேரி கோல்டு உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.

    தற்போது கோடை சீசன் தொடங்கி விட்டதாலும் மலர்கண்காட்சி தொடங்க இருப்பதாலும் இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா, பெரணி இல்ல பகுதி, இலை பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் பாத்திகள் அமைக்கப்பட்டும், நடைபாதையோரங்களிலும் மலர் நாற்றுகள் நடப்பட்டது.

    மலர் கண்காட்சிக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், தாவரவியல் பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக பூங்காவில் உள்ள பெரிய புல்வெளி மைதானம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டு, அதனை சுற்றி கயிறு கட்டப்பட்டு உள்ளது. அதனுள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    அதேபோல் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்புகளில் தற்போது பெகுனியா மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது சால்வியா, மேரி கோல்டு, டேலியா, பெட்டுன்னி ஆகிய மலர்கள் பூக்க தொடங்கியுள்ளன. பூங்காவில் பூக்கள் பூக்க தொடங்கி பூத்து குலுங்குகின்றன. இதனை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், தங்களது செல்போன்களில் படம் எடுத்து மகிழ்கின்றனர்.

    இதுதவிர ஜெரோனியம், சைக்லமன், பென்ஸ்டிமன், சுவீட் லில்லியம், பேன்சி, பெட்டுனியா உள்பட மொத்தம் 230 வகையான மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து, அவர்களது கண்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறது.

    பூந்தொட்டிகள் மலர் மாடங்கள் மற்றும் புல்வெளிகளில் பல்வேறு அலங்காரங்களுடன் அடுக்கி வைக்கப்பட உள்ளது.

    தற்போது ஊட்டியில் வெயில் அடித்து வருவதால் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி அதனை பராமரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூக்கள் பூத்து உள்ளதால் கோடை சீசன் களை கட்டியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போதே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்தனர். படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

    கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற இருப்பதால் பூங்காவில் பூச்செடிகளை பராமரித்தல், தடுப்பு வேலிகளுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்சமயம் மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்ல கோத்தகிரி சாலை ஒருவழிப்பாதையாக உள்ளது.

    இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் கோத்தகிரி நேரு பூங்காவையும் சுற்றி பார்த்து செல்கின்றனர்.

    அங்குள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர். காய்கறி கண்காட்சிக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டும் இருப்பதால் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    சுற்றுலா பயணிகள் வருகையால் நீலகிரியில் உள்ள தங்கும் விடுதிகள், காட்டேஜூகளும் நிரம்பி வழிந்தன. வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை பயன்படுத்தி சில காட்டேஜூகள் கட்டணத்தை உயர்த்தியும் வருகிறது.

    சுற்றுலா பயணிகள் வருகையால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மட்டுமே நம்பி தொழில் நடத்தி வந்த அனைத்து வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×